இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்.
Posted On Monday, June 22, 2009 at at 5:33 AM by மு.இரா
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை
STORY OF SRILANKAN TAMIL CINEMA
தம்பிஐயா தேவதாஸ்
(B.A.(Cey.), B.Ed.(Cey.),
Diploma in Journalism.
முதற்பதிப்பு: தி.பி. 2025 (கி.பி. 1994)
இரண்டாம் பதிப்பு: தி.பி. 2031 (கி.பி. 2000)
உரிமை: தம்பிஐயா தேவதாஸ்,
90/5 புதுச்செட்டித் தெரு, கொழும்பு - 13,
இலங்கை.
வெளியீடு: வி.எஸ். துரைராஜா,
75 உவாட் பிளேஸ், கொழும்பு 7, இலங்கை.
ஒளி அச்சக்கோப்பு: பா.செல்வராஜ். பி.எஸ்ஸி., வ. சாந்தி, அ. ஜெயராஜசிங்கம், மூவை நா. சுந்தரராசன், ஓவியம், பக்கமாக்கல்: ஓவியம் பாலமுருகன், மெய்ப்பு: புலவர் வெற்றியழகன், அலுவலக இணைப்பு: செ.ரா.ஷோப்னா, காந்தளகம், சென்னை: எதிர்மறை: சக்தி வண்ண ஆய்வகம், சிந்தாதிரிப்பேட்டை: அச்சு: ஜேசிபிடாட்ஸ், நுங்கம்பாக்கம்: கட்டுவேலை: பாலாஜி கட்டாளர், இராயப்பேட்டை: அட்டை ஓவியம்: எஸ்.டி.சாமி, கொழும்பு: அச்சிடல் தயாரிப்பு: மறவன்புலவு க. சச்சிதானந்தன், எம்.ஏ., எம். எஸ்ஸி., காந்தளகம், 834, அண்ணாசாலை, சென்னை - 600 002
அணிந்துரை
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சக்தி வாய்ந்த மீடியம் சினிமாதான் என்பதில் அபிப்பிராய பேதம் கிடையாது. ஏனைய ஊடகங்களை விட, இப்பொழுதுதான் நூறு வயதை எட்டிப் பிடித்திருக்கும் இந்த விஞ்ஞானம் சார்ந்த ஊடகத்தின் உடனடித் தாக்கம் மிக அதிகமானது. ஒரு சராசரிக் குடிமகனது அன்றாட வாழ்வின் அதிக அளவு இரண்டறக் கலந்து போய்விட்ட மீடியம் இதுதான். உலக உருண்டையின் பல்வேறு பாகங்களில் வாழும் பலதரப்பட்ட படைப்பாளிகள் இதை உற்சாகத்தோடு முன் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையின் சிங்கள சினிமா கூட, சிறிதளவாகச் சர்வதேச தரத்தில் வைத்துப் பேசக் கூடிய நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால், ஈழத்தின் தமிழ் சினிமா…?
மிகமிகப் பின்தங்கிப் போய், இன்றும் அரிச் சுவடிக் கட்டத்திலேயே இருக்கிறது. இந்திய சினிமாவின் குறிப்பாகத் தென்இந்திய சினிமாவின் ஆதிக்கமும், அந்த சினிமாவே தங்கள் சினிமா என்று ஈழமக்கள் கொண்டாடியதும் இதற்கு முக்கிய காரணங்கள்.
சிங்கள சினிமாவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களே தமிழர்கள்தான். சிங்கள சினிமாத் தயாரிப்பிலும், தென்னிந்திய சினிமா விநியோகத்திலும் தங்கள் நேரத்தை முடக்கி லாபம் சம்பாதித்த இலங்கைத் தமிழ் முதலாளிகள், தங்களுக் கென்று ஒரு ஈழத் தமிழ் சினிமாவை அதன் அடையாள முகவரிகளோடு வளர்க்கத் தவறிவிட்டார்கள் என்பதுதான் வருத்தமான உண்மை.
இவற்றிற்கு மத்தியில், தொழிற் நுட்பத்திலும் மீடிய ஆளுமையிலும் மிகச் சாதாரணமாய் இருந்த – ஆனால், ஈழ மண்ணின் மணத்தையும் இலங்கைத் தமிழரின் ஆத்மாவையும் ஓரளவு பிரதிபலிக்க முயன்ற ஓன்றிரண்டு தமிழ்ப் படங்களையும் பார்த்திருக்கிறேன்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் நடுவர் குழு அங்கத்தவனாகவும், விருந்தினனாகவும் கலந்து கொண்ட சமயங்களில், அதிகம் மக்கள் தொகையற்ற சின்னச் சின்ன நாடுகளிலிருந்து வந்த அற்புதமான படங்களைப் பார்க்கும் போதெல்லாம், இலங்கையிலிருந்துகூட இப்படியொரு படம் - தமிழ்ப்படம் வரக்கூடாது என்று நான் அங்கலாப்பதுண்டு.
இலங்கைத் தமிழ் சினிமா தனது தற்போதைய சூழ்நிலையின் ஊடாக உலக தரம் வாய்ந்த பல அசாத்தியமான படங்களைத் தரமுடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். இது வெறும் உணர்ச்சி வசப்பட்ட நம்பிக்கையல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மனசு வைத்தால், ஈழத்து இளைய தலைமுறையின் வீரிய வீச்சு அங்குள்ள சினிமாவிலும் பிரதிபலிக்கும். இது சத்தியம்.
சர்வதேச கலை இலக்கிய அரங்கில், தமிழ் மொழியின் முகத்தை ஈழத்து எழுத்துக்களே அடையாளம் காட்டப் போகின்றன என்ற உறுதியான விமர்சனம் வைக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், அந்த நம்பிக்கை திரைப்படங்களுக்கும் பொருந்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
இலங்கையின் தமிழ் சினிமாவைப் பற்றி ஓர் அறிமுக நூல் வெளியாவது இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் பொருத்தமானதே. ஏனெனில் அவரவர் வரலாறு தான் அந்தந்த மக்களின் சாகித்தியங்களைச் சாதனைகளாக வளர்க்கும்.
இந்தநூலின் ஆசிரியர் ஒரு சினிமா ஆர்வலர் என்று அறிகிறேன். அவரது இந்த முயற்சியை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.
இதன் பதிப்பாளர் கட்டிடக்கலைஞர் திரு. வி.எஸ். துரைராஜா என் நெடுநாளைய நண்பர். இலங்கைத் தமிழ் சினிமாவுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்திருப்பவர். அவரிடம் இது போன்ற இன்னும் பல ஊக்குதல்களை நான் எதிர்பார்க்கிறேன்.
பாலுமகேந்திரா.
பதிவிறக்கம் செய்ய…